ஆன்மிகம்
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்ட போது எடுத்த படம்.

மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

Published On 2020-12-11 03:10 GMT   |   Update On 2020-12-11 03:10 GMT
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீப ‘மை’ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 29-ந்தேதி நகரில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடாதுணி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபத்திருவிழாவின் போது மகா தீபத்தை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர்.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதை மற்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்தும் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.

நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுக்கிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News