செய்திகள்
கோப்புபடம்

கடலூர் முதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2020-10-18 13:28 GMT   |   Update On 2020-10-18 13:28 GMT
கடலூர் முதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் அருகே எஸ்.புதூரில் ஜலகண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், கோவில் உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டுள்ளது. அதனால் உண்டியலில் அதிகளவில் காணிக்கை பணம் இருந்திருக்காது என கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலில் ஏற்கனவே 2 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News