செய்திகள்
பிரதமர் மோடி

இந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி

Published On 2019-11-09 10:28 GMT   |   Update On 2019-11-09 10:28 GMT
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் பாதையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, இதற்காக உழைத்தமைக்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.
சண்டிகர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.

அவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி,  குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் கர்தார்பூர் பாதை அமைக்கப்பட்டது.

இந்த கர்தார்பூர் பாதை வழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு  தீர்மானித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் செல்லும் சீக்கியர்கள் பாஸ்போர்ட் கொண்டு செல்ல தேவையில்லை. இந்தியாவில் வாழ்வதற்கான ஏதாவது ஒரு அரசு ஆவணத்தை காண்பித்தால் போதும்.

இந்நிலையில், இந்தியாவின் தரப்பில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டேரா பாபா நானக் குருத்வாரா அருகேயுள்ள ஷிக்ஹார் மைஷான் முகாம் பகுதியில் கர்தார்பூர் பாதையையும் புதிதாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இதேபோல் பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கர்தார்பூர் பாதையை திறந்து வைத்தார்.



இன்று திறக்கப்பட்ட கர்தார்பூர் பாதை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் முதல் சீக்கிய யாத்ரீகர்கள் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர். அவர்களை சந்தித்த பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, சுல்தான்பூர் லோதி பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்திலும் பங்கேற்றார்.



பஞ்சாப்பில் நடைபெற்ற திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த நேரத்துக்குள் கர்தார்பூர் பாதை அமைப்பதற்காக உழைத்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

'இந்த பாதையை திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மிக சேவை செய்யும் சீக்கிய மக்களுக்கு ஏற்படும் அதே உணர்வினை இந்த புனிதமான மண்ணில் நிற்கும் வேளையில் நான் உணர்கிறேன்.

குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான ஊக்கசக்தியாக அவர் விளங்கினார். குருநானக் தேவ் ஒரு குருவாக மட்டுமல்லாமல் நமது சிந்தனையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் திகழ்ந்தார்.

இந்த பாதையை அமைப்பதற்கு உழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்தார்பூர் பாதை விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அதற்கு மதிப்பளித்து, உரிய வகையில் செயலாற்றினார்’ என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News