சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,221 ஆக உயர்ந்தது
சேலம்:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக தமிழகத்தில் பரவியது. இதனால் பலர் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 400-யை தாண்டியது. இருப்பினும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இடைவிடாமல் தொடர்ந்து பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் முக்கியமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்காணித்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ச்சியாக அரசு வகுத்த கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை செயல்படுத்தியது.
இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் தீவிரம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 17 பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் நேற்று குணமடைந்ததால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.