செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
பொன்னேரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி;
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் நைனியப்பன் (வயது 45). இவரது மகள் சிவரஞ்சனி (23). இவரும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் திருப்பாலைவனம் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவரது வீட்டில் சிவரஞ்சனி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில் சிவரஞ்சினி உடலை போலீசார் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை நைனியப்பன் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், மருமகன் பிரவீன்குமார் வரதட்சணை கேட்டு தனது மகள் சிவரஞ்சனியை அடித்து துன்புறுத்தியதாகவும், எனவே அவரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.