செய்திகள்
விஜயகாந்த் - பிரேமலதா

உள்ளாட்சி தேர்தல்: விஜயகாந்த் கம்பீரமாக பிரசாரம் செய்வார் - பிரேமலதா

Published On 2019-11-07 08:58 GMT   |   Update On 2019-11-07 08:59 GMT
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடன் தே.மு.தி.க. போட்டியிடும் இடங்களில் விஜயகாந்த கம்பீரமாக பிரசாரம் செய்வார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
போரூர்:

தே.மு.தி.க. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் ஆகியோர் காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த இடங்களை கேட்டு பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது விஜயகாந்த் பேசும் போது, “உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் அனைவரும் நல்லபடியாக வேலை பார்க்க வேண்டும் வெற்றி நமதே” என்றார்.

பின்னர் பிரேமலதா பேசும் போது, “வெற்றி பெற்றதும் மற்ற கட்சிக்கு செல்லக் கூடிய நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யக் கூடாது. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும். மாநகராட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார்” என்றார்.



இதைத் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் விவரம் வருமாறு:-

“தமிழகம் முழுவதும் பயன்பாட்டுக்கு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உள்ளாட்சி தேர்தலில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணியின் மூலம் நமக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி இடங்களில் போட்டியிட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெறுவதற்கு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தோடு நமது கூட்டணி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய பாடுபட வேண்டும்.

* திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்த காரணமாக அமைந்து விடும். அதனால் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அக்பர், சந்திரா. மாவட்ட செயலாளர்கள் பேரூர் தினகர், அனகை முருகேசன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. திருவள்ளுவரை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் இதே கூட்டணி நீடித்து அமோக வெற்றி பெறுவோம்.

எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். தேர்தல் தேதி அறிவித்த உடன் தே.மு.தி.க. போட்டியிடும் இடங்கள் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும். விஜயகாந்த் உடல்நலத்துடன் சூப்பராக இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய வெகுவிரைவில் கம்பீரமாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News