செய்திகள்
செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் உலக அளவில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் - ஜே.பி.நட்டா
செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் உலக அளவில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவை சேர்ந்த மார்னிங்க் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில், உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 20 சதவீதம் பேர் அதனை ஏற்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடி மேலும் சிறப்பான தலைமையை இந்தியாவுக்கு வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக கையாண்டு மக்களின் வலுவான நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மார்னிங்க் கன்சல்ட் ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீடு பிரதமரின் திறமையான தலைமை மற்றும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பெருமை அளிக்கிறது என தெரிவித்தார்.