செய்திகள்
ஜெ.அன்பழகன்

அதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து ரஜினி கூறி இருப்பார்- ஜெ.அன்பழகன் பேட்டி

Published On 2019-11-22 10:04 GMT   |   Update On 2019-11-22 10:04 GMT
2021- ல் அதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பார் என்று தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை:

2021-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

பழைய காலத்து படமான பட்டணத்தில் பூதம் படத்தில் ‘ஜீ பூம்பா’ என்று ஒருவர் வருவார். அதிசயம் வரப் போகிறது பாருங்கள் என்று ஒவ்வொன்றாக செய்து காட்டுவார். கடைசியில் அது பூதம்னு தெரிஞ்சி அது காணாமல் போய்விடும் அந்த படத்திலேயே.

அதுமாதிரி ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு பட்டணத்தில் பூதம் படத்தை பார்த்திருப்பார் என தெரிகிறது. அதனால் அந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறர்.

அரசியல் பற்றி 1996-ம் ஆண்டில் இருந்து ரஜினி பேசி வருகிறார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் இல்லை. அவரது படம் ஓடுவதற்காக அரசியல் பேசுகிறார். ‘தர்பார்’ படம் இசை வெளியீடு 7-ந் தேதி வருகிறது. அப்போது ஒரு பரபரப்பை உருவாக்க அரசியல் பேசுவார்.


அதன்பிறகு அடுத்த படத்துக்கு அரசியல் பேசுவார். இதெல்லாம் ‘பிசினஸ் டிரிக்’

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிசயம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு அமைதியான முறையில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதை நினைத்துகூட அவர் அப்படி சொல்லி இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு ஜெ.அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News