ஆன்மிகம்
ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா தொடக்கம்

Published On 2021-03-13 06:07 GMT   |   Update On 2021-03-13 06:07 GMT
ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 10-ந்தேதி சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கம்பத்தை பக்தர்கள் சுமந்து வந்து, திரவுபதியம்மன் கோவிலில் கொண்டு வந்து வைத்தனர்.

நேற்று முன்தினம் பக்தர்கள் மகாசிவராத்திரி விரதம் இருந்தனர். சிவராத்திரியையொட்டி கோவில் நடை விடிய, விடிய திறந்து வைக்கப்பட்டது. கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை ஆற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேள, தாளம் முழுங்க கம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு செய்த பின் கொடிகம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

18-ந்தேதி காலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 28-ந்தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந்தேதி காலையில் நடக்கிறது நடக்கிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், 30-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது. 31-ந்தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
Tags:    

Similar News