செய்திகள்
கோப்புபடம்

இலங்கைக்கு கடத்த இருந்த 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2020-09-13 08:57 GMT   |   Update On 2020-09-13 08:57 GMT
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில் மண்டபம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர போலீசார் வேதாளை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் 34 மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலோர போலீசார் வாகனத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிக பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் லோக வெங்கடேஷ்(வயது 40) என்பவரையும் மற்றும் அந்த வாகனத்தில் இருந்த வேதாளை வடக்கு தெருவைச் சேர்ந்த சகிபுல்லா(40), ரியாஸ்(38) ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இந்த மஞ்சள் மூடைகளை ஏற்றிக் கொண்டு வந்ததாகவும் வேதாளை கடற்கரையில் இருந்து படகு மூலம் ஏற்றி இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், நடுக்கடலில் வைத்து இலங்கையில் இருந்துவரும் கடத்தல்காரர்களிடம் இந்த மஞ்சள் மூட்டைகளை ஒப்படைத்து விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ. 1000-ல் இருந்து 1,500 வரையிலும் விலை போவதாகவும், மஞ்சள் மருத்துவ குணமிக்க பொருளாக இருப்பதுடன் உணவுப் பொருட்களில் மஞ்சள் அதிகம் சேர்க்கப்படுவதாலும் கொரோனா வைரசை தடுப்பதில் மஞ்சள் முக்கிய பங்கு வகித்து வருவதாலும் ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு இந்த மஞ்சளை கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் இந்த மஞ்சளை இலங்கையிலிருந்து வரும் கடத்தல்காரர்களிடம் மஞ்சளை கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளை ஏதேனும் வாங்க திட்டமிட்டு இருந்தனரா என்ற அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News