செய்திகள்
ரெயில்

பயணிகள் வசதிக்காக கூடுதலாக 20 சிறப்பு ரெயில்கள் 21-ந்தேதி முதல் இயக்கம்- ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-09-16 06:16 GMT   |   Update On 2020-09-16 06:16 GMT
பயணிகளின் தேவையை கருதியும் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரெயில்கள் (குளோன் ரெயில்கள்) வருகிற 21-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

தற்போது மத்திய அரசு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. படிப்படியாக பொது போக்குவரத்து அமல் படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சிறப்பு ரெயில்கள் நாடு முழுவதும் 310 வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் ஏராளமான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

இதை கருத்தில் கொண்டும் பயணிகளின் தேவையை கருதியும் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரெயில்கள் (குளோன் ரெயில்கள்) வருகிற 21-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்த ரெயில்கள் குறிப்பிட்ட வழித்தட ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு அதே வழித் தடத்தில் மாற்று வழியாக இயக்கப்படும்.

மேலும் குளோன் ரெயில்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில்வே வரலாற்றில் குளோன் ரெயில் இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு 19-ந்தேதி தொடங்குகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக 3 அடுக்கு ஏ.சி. ரெயில்களாக இயக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

20 ஜோடி சிறப்பு ரெயில்களில் பெரும்பாலானவை பீகார் மாநிலத்துக்கு விடப்பட்டு இருக்கிறது. 19 ரெயில்கள் உம்ஷாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கட்டணத்துக்கு இணையாக வசூலிக்கப்படுகிறது.

19 ரெயில்களில் தலா 18 பெட்டிகளும், லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் ரெயிலில் 22 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 10 ரெயில்கள் பீகார்-டெல்லி இடையே இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News