செய்திகள்
லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் - ராணுவம் எச்சரிக்கை

Published On 2019-09-09 11:36 GMT   |   Update On 2019-09-09 11:36 GMT
சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் படகுகள் கிடைத்துள்ளதால் நாட்டின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ராணுவம் இன்று எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில் கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீசார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இறங்கி கடலோர போலீசார் சோதனையிட்டனர். அந்த படகில் என்ஜினோ, தூண்டில் நரம்பு உள்ளிட்ட எந்தவொரு பொருட்களும் இல்லை என சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து தீவு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா, யாரும் பதுங்கி உள்ளனரா? என்று கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் தீவு பகுதியிலோ யாரும் இல்லாததால் பிளாஸ்டிக் படகை மீன்பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் பகுதிக்கு இழுத்துச் சென்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



இதேபோல், குஜராத் மாநில கடல்பகுதியில் உள்ள சர் கிரீக் என்ற சிறுகுடாவில் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரு இயந்திரப் படகுகள் அனாதையாக மிதந்தன.

இந்நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய ராணுவத்தின்  தென்னிந்தியா பிரிவுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி இன்று எச்சரித்துள்ளார்.

’சமீபத்தில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதை முன்எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என எஸ்.கே.சைனி தெரிவித்தார்.

Tags:    

Similar News