உள்ளூர் செய்திகள்
எம்.ராசாம்பாளையம் சனீஸ்வரன் கோவில் கும்பாபிசேக விழா
மோகனூர் எம்.ராசாம்பாளையம் சனீஸ்வரன் கோவில் கும்பாபிசேக விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மாடகாசம்பட்டி ஊராட்சியில் எம்.ராசாம்பாளையம் அறியாஊற்று செம்மலை சனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு, ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரன், மகா விஷ்ணு, பிரம்மா ஆகிய சாமிகள் உள்ளன. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமம மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் புனித தீர்த்தம் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் விநாயகர் பூஜை, புண்யாகம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், மும்மூர்த்திகளுக்கும் சுவாமி பிரதிஷ்டை மருந்து சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை வேதபாராயணம், நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து காலை 6.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு மற்றும் அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான எற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராமசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.