தொழில்நுட்பம்
ஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர் விவரங்கள் திருட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல்
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இருந்து இந்திய வாக்காளர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை தொடங்கியது. ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஆகிய இரு நிறுவனங்களிடமும் முழுமையான விளக்கத்தையும், தகவல்களையும் கேட்டது.
அந்த தகவல்களை இரு நிறுவனங்களும் அளித்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருவதாக சி.பி.ஐ. நேற்று தெரிவித்தது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான், வழக்குப்பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பதை சி.பி.ஐ. முடிவு செய்யும்.