செய்திகள்
கந்தம்பாளையம் அருகே காதலி இறந்த துக்கத்தில் லாரி டிரைவர் தற்கொலை
கந்தம்பாளையம் அருகே காதலி இறந்த துக்கத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவரது மகள் 17 வயது சிறுமி. இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். திருச்செங்கோடு கொசவம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து மகன் தினேஷ்குமார் (22). லாரி டிரைவர். சிறுமியும், லாரி டிரைவர் தினேஷ்குமாரும் காதலித்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் 30-ந் தேதி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த தினேஷ்குமார் மனமுடைந்து, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 31-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் காட்டுப்பகுதியில் தினேஷ்குமார் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்ததில் காதலி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் லாரி டிரைவர் தினேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.