செய்திகள்
இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று பொறுப்பேற்றார்.
கொச்சி:
நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளில் சாதித்து வருகின்றனர். கல்வி, அறிவியல், ராணுவம் போன்ற துறைகளிலும் பெண்கள் தங்களுக்கான முத்திரையை பதித்து வருகின்றனர்.
ராணுவத்தின் முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், இந்தியத் தரைப்படை, கடற்படை, விமானப்படையில் பெண் விமானிகளையும் வீராங்கனைகளையும் அதிக எண்ணிக்கையில் நியமிக்க 2016ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து, முப்படைகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக பீகாரைச் சேர்ந்த சப் லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று பொறுப்பேற்றார்.
கடற்படை விமான பயிற்சிகளை முடித்த ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானியாக தகுதிபெறும் ‘விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்து பொறுப்பேற்கச் செய்தார்.