செய்திகள்
சஞ்சய் ராவத்

எதிர்க்கட்சியினருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Published On 2021-05-26 02:03 GMT   |   Update On 2021-05-26 02:03 GMT
டூல்கிட் விவகாரத்தில் போலீஸ் சோதனை நடத்தியது எதிர்க்கட்சியினருக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்று பா.ஜனதாவை சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை :

நாட்டின் நற்பெயரையும், பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை கையாள்வதையும் விமர்சித்து காங்கிரஸ் கட்சி டூல்கிட்டை தயாரித்துள்ளது என பா.ஜனதா குற்றம்சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்தது, பொய்யான பிரசாரங்களை பா.ஜனதா பரப்புகிறார்கள் என கண்டித்தது.

இதனிடையே டூல்கிட் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார், நேற்று முன்தினம் டுவிட்டர் அலுவலகத்துக்கு சென்று விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி, சோதனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில் இந்த டூல்கிட் விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளித்து கூறியதாவது:-

சமூக ஊடகம் அல்லது டூல் கிட்டை முன்பு பா.ஜனதாவும் பயன்படுத்தி இருந்தது. ஆனால், தற்போது பா.ஜனதாவுக்கு பின்னடைவு வரும்போது, சோதனை நடத்துகிறது, எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கிறது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம், ரசித்து வருகிறோம்.

சமூக ஊடகங்கள் குறித்தும், டூல்கிட் குறித்தும் இந்திய அளவிலும், உலகளவிலும் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக விரிவாகப் பேசவிரும்பவில்லை.

கங்கை நதியில் ஏராளமான உடல்கள் மிதந்து வந்தபோது, அது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஏதாவது கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். ராமர் கோவில் விவகாரத்தில் அளித்த முக்கியத்துவத்தை போல், கங்கை நதிக்கும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Tags:    

Similar News