உள்ளூர் செய்திகள்
மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரத்தில் மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன், இ.பி. ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவருக்கு திருமணமாகி நிவேதா என்ற (27) மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சீனிவாசன் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. மேலும் குடிப்பழக்கம் இருந்தது.
இதனால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிவேதா கோபித்துக்கொண்டு குருசாமிபாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். சீனிவாசன் அவரது வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்து வந்த சீனிவாசன் அவரது வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த நண்பர் தினேஷ்குமார் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது பற்றி அவர் சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்துகொண்ட சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.