செய்திகள்
பெரியகுளம் அருகே கோவிலில் நகை-பணம் கொள்ளை
பெரியகுளம் அருகே பகவதிஅம்மன் கோவிலில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் வைகை அணை சாலையில் பகவதிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக மணி (வயது 60) என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது. மேலும் கோவிலின் மூலஸ்தான கதவின் பூட்டை உடைத்து அம்மன் விக்ரகத்தில் இருந்த 1¾ பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பூசாரி மணி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.