செய்திகள்
திருட்டு

விசைத்தறி அதிபர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2020-11-13 09:38 GMT   |   Update On 2020-11-13 09:38 GMT
மல்லசமுத்திரம் அருகே விசைத்தறி அதிபர் வீட்டில் 23 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மல்லசமுத்திரம்:

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள முதலியார் தெருவில் வசித்து வருபவர் மாதவன் (வயது 52). விசைத்தறி அதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது பின் கதவினை நைசாக திறந்து அதன் வழியாக மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு பூட்டப்படாமல் இருந்த பீரோவையும் திறந்தனர்.

இதையடுத்து அதிலிருந்த தங்க செயின், கம்மல், மோதிரம் உள்பட 23 பவுன் நகைகளையும், 2 கிலோ வெள்ளி பொருட்களையும் திருடி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்தநிலையில், நேற்று காலை எழுந்த மாதவன் மற்றும் குடும்பத்தினர் பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் சோதனை செய்தபோது அதிலிருந்த 23 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர்கள் மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த ரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News