செய்திகள்
விபத்து

வேலூர் காகிதப்பட்டறையில் வேன் மோதி என்ஜினீயர் பலி

Published On 2021-09-09 11:10 GMT   |   Update On 2021-09-09 11:10 GMT
வேலூர் காகிதப்பட்டறையில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயர் வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூரை சேர்ந்தவர் குருநாதன் (வயது 35). என்ஜினீயர். இவரது மனைவி நந்தினி. இவர் வேலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். குருநாதன் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இன்று காலை சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். காகிதப்பட்டறை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே வந்த போது குறுக்கே நாய் புகுந்தது. இதனால் நிலை தடுமாறிய குருநாதன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது வேலூரிலிருந்து சத்துவாச்சாரி நோக்கி கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன் குருநாதன் தலைமீது ஏறி இறங்கியது. இதில் குருநாதன் அணிந்திருந்த ஹெல்மெட் நசுங்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் குருநாதனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதன் மீது மோதிய வேனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News