ஆன்மிகம்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

வடபழனி கோவிலில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா

Published On 2021-01-28 06:14 GMT   |   Update On 2021-01-28 06:14 GMT
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை :

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் தை பூசத் தெப்ப திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்பம், நாளை (வெள்ளிக்கிழமை) சிங்காரவேலர் தெப்பம், 30-ந்தேதி சிங்காரவேலர் தெப்பம் நடக்கிறது.

விழா நாட்களில் தினசரி இரவு 7 மணி முதல் தெப்பம் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவை https://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற YouTube channel- என்ற இணையதள முகவரியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வடபழனி முருகன் கோவிலில் திருப்பணி நடைபெற்றுவருவதால் பக்தர்கள் நலன் கருதி, பால்குடம், காவடி மற்றும் அலகு குத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் தைப்பூசத்தை முன்னிட்டு கட்டாய முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிவுற்று காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அபிஷேக நேரம் நீங்கலாக தொடர்ந்து தரிசனம் செய்யலாம். மூலவர் அதிகாலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை ராஜ அலங்காரத்திலும், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வைர சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.

கோவிலின் தெற்கு கோபுர வாயில் இருண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வள்ளி மண்டபம் அருகில் வாகன நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News