செய்திகள்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்திட கொடிநாளுக்கு நிதி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

Published On 2018-12-06 10:18 GMT   |   Update On 2018-12-06 10:18 GMT
தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalaniswami #Blackday
சென்னை:

கொடிநாள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.



இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டுமென நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #Blackday
Tags:    

Similar News