ஆன்மிகம்
வேதாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வலம் வந்த போது எடுத்த படம்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா

Published On 2021-03-02 04:08 GMT   |   Update On 2021-03-02 04:08 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 28 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். இதை தொடர்ந்து குளத்தில் தெப்பம் சுற்றி வலம் வந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் தென்னரசு தலைமையில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News