செய்திகள்
மதுபானம்

கூடுதல் கட்டுப்பாட்டால் நேரம் குறைப்பு- டாஸ்மாக் கடைகளில் 30 சதவீத விற்பனை பாதிப்பு

Published On 2021-08-17 08:45 GMT   |   Update On 2021-08-17 08:45 GMT
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய கடைகள் தவிர டாஸ்மாக் உள்பட மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூடவேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான கண்டறியப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள 24 இடங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் முழுமையாக அடைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் 105 பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும். வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்து அதன் காரணமாக மாலை 5 மணிக்கே மூட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே கடைகள் மூட வேண்டிய நிலை உள்ளதால் டாஸ்மாக் கடை விற்பனை 30 சதவீதமாக குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மாலை 6 மணிக்கு பிறகு தான் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். தற்போது 5 மணிக்கே கடைகளை மூடி விடுவதால் விற்பனை சதவீதம் குறைந்துள்ளது என்றனர்.

இதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் வாரத்துக்கு 2 நாட்கள் மூடப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News