செய்திகள்
அவினாசி அருகே கிராவல் மண் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு
அவினாசி அருகே கிராவல் மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி:
அவினாசி அருகே கிராவல் மண் கடத்துவதாக மாவட்ட வருவாய் ஆய்வாளர் (கனிமம்) சதீஸ்குமார் அவினாசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவினாசி போலீசார் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வேட்டுவபாளையத்திலிருந்து வெள்ளியம்பாளையம் நோக்கி வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 யூனிட் கிராவல் மண் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கிராவல் மண் கடத்தியதாக லாரியை ஒட்டி வந்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த முருகசாமி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கிராவல் மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.