செய்திகள்
தீக்குளிப்பு முயற்சியை தடுக்க பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல் வழங்க தடை
போலீசாருக்கு தெரியாமல் கேன்களில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்து அவ்வப்போது தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர்:
கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருவோர் போலீசாருக்கு தெரியாமல் கேன்களில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்து, அவ்வப்போது தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் வயதான தம்பதி, அதற்கு முன் மாற்றுத்திறனாளி, சீட் மோசடியில் ஏமாந்த பெண் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாநகர போலீசார் தரப்பில் இருந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் செயல்படும் சில பெட்ரோல் பங்க்குகளில் காவல்துறை அறிவிப்பு என குறிப்பிட்டு ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில்,பெட்ரோல், டீசல் பிளாஸ்டிக்கேன், பாட்டில்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.