செய்திகள்
நம்மால் எதுவும் முடியும்- ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உற்சாக பேட்டி
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு பல வருட கடின பயிற்சி மற்றும் பலரின் ஆதரவு உதவியாக இருந்ததாக நீரஜ் சோப்ரா கூறினார்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அத்துடன், ஒலிம்பிக் தடகளத்தில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.
இந்த சாதனை குறித்து தங்க மகன் நீரஜ் சோப்ரா கூறியதாவது:-
ஒலிம்பிக் தடகளத்திலும், டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நாம் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை என்பதால், நான் தங்கம் வெல்ல வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆனால் நான் களத்தில் இருக்கும்போது, அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, ஈட்டியை வீசுவதில் மட்டும் கவனம் செலுத்தினேன். இதனால்தான் அழுத்தம் இருப்பதாக நான் உணரவில்லை.
ஒலிம்பிக்கில் எந்த ஒரு போட்டியும் ஒரு நாளில் முடியக்கூடிய நிகழ்வல்ல. நான் இந்த சாதனையை அடைவதற்கு, பல வருட கடின பயிற்சி மற்றும் பலரின் ஆதரவு எனக்கு உதவியாக இருந்தது.
நான் வென்றுள்ள இந்த பதக்கத்தால், குறிப்பாக ஈட்டி மற்றும் தடகள விளையாட்டில் நிச்சயம் வித்தியாசமான மாற்றம் நிகழும்.
இந்திய தடகள சம்மேளனம் ஈட்டி எறிதல் விளையாட்டை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன், ஏனென்றால் இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை.
இன்று நான் இந்த பதக்கத்தை வென்றுள்ளதால், நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் அதிகமான வீரர்களுக்கு இந்திய தடகள கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.