செய்திகள்
உதயநிதியைப் பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு பிபி எகிறுது... அமித் ஷா நெல்லையில் பிரசாரம்
பாஜக தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்தது என அமித் ஷா பேசினார்.
நெல்லை:
நெல்லையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தன் மகனைப்பற்றி மட்டுமே கவலை கொள்கிறார். தன் மகனை முதல்வராக்குவது பற்றி யோசிக்கிறார். மாநிலத்தைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? அல்லது மகனை முதல்வர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
நான் உதயநிதியைப் பற்றி பேசும்போதெல்லாம், ஸ்டாலின் கோபப்படுகிறார். அவரது பிபி (ரத்த அழுத்தம்) உயர்கிறது. பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது பேசுகிறார். இறந்த தலைவர்கள் குறித்து ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதிமுக தலித்துகளின் எண்ணங்களை புரிந்துகொள்கிறார்கள். பாஜக தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்தது. கட்சியின் இந்த மாநிலத் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.