செய்திகள்
3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்

தேர்வை புறக்கணித்து 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்

Published On 2021-09-09 11:31 GMT   |   Update On 2021-09-09 11:31 GMT
தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வினை ஆன்லைன் வழியாக நடத்தவும், தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கற்பித்தல் தேர்வு நடந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 7 மாணவர்கள், 81 மாணவிகள் என மொத்தம் 88 பேரில், 4 ஆண்கள், 47 மாணவிகள் என மொத்தம் 51 பேர் தேர்வு எழுதினர். மற்ற 37 பேரில் பலர் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை. சிலர் தேர்வை புறக்கணித்து மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (வியாழக்கிழமை) முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் கற்பித்தல் தேர்வு நடக்கிறது.

Tags:    

Similar News