உள்ளூர் செய்திகள்
சர்வீஸ் சாலைக்கு வராத பஸ்களால் வெளியூர் சமயபுரம் பக்தர்கள் அவதி
சர்வீஸ் சாலைக்கு வராத பஸ்களால் வெளியூர் சமயபுரம் பக்தர்கள் அவதியடைகின்றனர்.
திருச்சி:
திருச்சியிலுள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து பகுதியிலிருந்தும் பொதுமக்கள், பக்தகோடிகள் திரளாக வந்து செல்கின்றனர். விழாக் காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் சமயபுரத்தில் காண முடிகிறது.
திருச்சியிலிருந்து பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் புறநகரப் பேருந்துகள் சமயபுரம் சர்வீஸ் சாலையில் வந்து பக்தர்களை இறக்கியும் ஏற்றியும் செல்லாமல் பக்தர்களுக்கு தொடர்ந்து இன்னல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
புறவழிச்சாலை வசதி என்பது திருச்சி -சென்னை சென்னை &திருச்சி செல்லும் தொலைதூர பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டதாகும். ஆனால் லோக்கல் பேருந்துகள் வந்து செல்லாமல் தொடர்ந்து பக்தர்களுக்கு பேருந்து சேவையை புறக்கணித்து வருகிறார்கள்.
இதேப் பேருந்துகள் திருச்சி -பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் திருச்சி வந்து செல்லும் போது சமயபுரத்தை தவிர, சிறுவாச்சூர், இரூர், ஆலத்தூர் கேட், பாடாலூர், சிறுகனூர், நம்பர் ஒன் டோல்கேட் ஆகிய சர்வீஸ் சாலையில் தான் இயக்கி வருகிறார்கள்.
எனவே திருச்சி - பெரம்பலூர், பெரம்பலூர் -திருச்சி செல்லும் அரசு மற்றும் தனியார் புறநகர்ப் பேருந்துகளை சமயபுரம் சர்வீஸ் சாலை வழியாக இயக்கிக் கொடுத்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.