ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

ராமேசுவரம் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

Published On 2021-08-31 07:20 GMT   |   Update On 2021-08-31 07:20 GMT
ராமேசுவரம் கோவிலில் நேற்று அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து பலர் வழிபட்டனர்.

கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு ரத வீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

இதேபோல் தனுஷ்கோடி கடற்கரையிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
Tags:    

Similar News