செய்திகள்
தற்கொலை

மார்த்தாண்டம் அருகே கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-08 16:01 GMT   |   Update On 2021-04-08 16:01 GMT
மார்த்தாண்டம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியில் உள்ள முளயன்விளையை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75), தொழிலாளி. இவருடைய மனைவி ரோசம்மாள் (68). இவர்களுக்கு சிங் (40), ஜெகதீஷ் (37) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சிங் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் மனைவியும், குழந்தைகளும் வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஜெகதீஷ் அதே பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவியும், குழந்தைகளும் மேக்கா மண்டபத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லட்சுமணனும், அவருடைய மனைவி ரோசம்மாளும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் லட்சுமணனும், ரோசம்மாளும் மட்டுமே இருந்தனர்.

நேற்று வெகு நேரம் ஆகியும் லட்சுமணன் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, லட்சுமணன் ஒரு பக்கமும், ரோசம்மாள் இன்னொரு பக்கமும் பிணமாக கிடந்தனர். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து லட்சுமணன் மற்றும் ரோசம்மாள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, அவர்கள் எழுதிய கடிதம்ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “வயதான காலத்தில் நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் இந்த முடிவை தேடி கொண்டோம்” என்று உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜெகதீஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News