செய்திகள்
சுரேஷ்

விழுப்புரம் அருகே ரெயில் மோதி பெயிண்டர் பலி

Published On 2021-04-09 02:36 GMT   |   Update On 2021-04-09 02:36 GMT
செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் ஏரிக்கரை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமு மகன் சுரேஷ் (வயது 38). இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தற்போது இவர் சென்னையில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக கடந்த 6-ந் தேதியன்று சுரேஷ் தனது சொந்த ஊருக்கு வந்தார். தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் சென்னைக்கு பஸ்சில் செல்ல நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு வளவனூர் மெயின்ரோட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் தனது செல்போனில் ஹெட்போன் மூலமாக பாடல் கேட்டுக்கொண்டே நடந்து சென்றார். சிறுவந்தாடு ரெயில்வே கேட் அருகில் சென்றபோது அவ்வழியாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ரெயில் மோதியதில் சுரேஷ், உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News