லைஃப்ஸ்டைல்
தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள்

தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையா... அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... தாய்ப்பால் பெருகும்...

Published On 2020-09-16 06:48 GMT   |   Update On 2020-09-16 06:48 GMT
ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன.

அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள் அதற்கான காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.

பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.

போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இலவங்கப்பட்டையை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டன. குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.

சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்

முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.

பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.

பூண்டு உணவில் நாம் அதிகம் சேர்த்ததுக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள பொருளாகும். இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.

வெற்றிலையில் பல மகத்துவங்கள் அடங்கி உள்ளன. பிள்ளைப் பேறு பெண்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றிலை ஒரு வரபிராசாதம் என்றால் மிகையில்லை. வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது.

இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.
Tags:    

Similar News