வழிபாடு
சனி பகவான், ராசிகள்

சமூக அந்தஸ்து தரும் சச யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்

Published On 2022-04-05 06:25 GMT   |   Update On 2022-04-05 09:14 GMT
சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும்.
சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள். மத்திய அளவில் உயரம், கருப்பான நிறம் கொண்ட இவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆயுள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், தன்னை நம்பியவர்களுக்காக உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள் ஆவர்.

இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

சச யோகம் பெறுவது அரிதான யோகம். சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2022 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு 7,10 ல் இருந்தால், ரிஷபத்திற்கு 10ல் இருந்தால்,கடகத்திற்கு 4,7 ல் இருந்தால், சிம்மத்திற்கு 7ல் இருந்தால் துலாத்திற்கு லக்கினம் மற்றும் 4ல் இருந்தால் விருச்சிகத்திற்கு 4ல் இருந்தால் கும்பத்திற்கு லக்கினத்தில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு ராசிநாதன் 10ஆம் வீடான துலாம் ராசியில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு 10ல் தனித்து எவர் சேர்க்கை பார்வை பெறாமல் உச்சம் பெறும் சனி முழுமையான சச யோகம் தர போகிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News