செய்திகள்
மாஸ்க் அணியாதவரிடம் அபராதம் வசூலிக்கும் காட்சி

கர்நாடகத்தில் கடந்த 4 மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதமாக வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

Published On 2020-10-12 02:21 GMT   |   Update On 2020-10-12 02:21 GMT
பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இவ்வளவு தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதியில் இருந்து அக்டோபர் 10-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் 1.46 லட்சம் நபர்களிடம் இருந்து ரூ.3.14 கோடி அபராதம் வசூலாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சமீபத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அபராத தொகை குறைக்கப்பட்டது. அபராத தொகை ரூ.1,000 மற்றும் ரூ.500 என மாநிலம் முழுவதும் 6 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்டது. அந்த 6 நாட்களில் மட்டும் 5 ஆயிரத்து 265 நபர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 93 ஆயிரம் அபராதம் வசூலாகி இருப்பது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News