செய்திகள்
அனைத்து வீதிகளிலும் தண்டோரா மூலம் கொரோனா விழிப்புணர்வு
உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மகளிர் கூட்டமைப்பினர் சுய உதவிக்குழுவினரை உள்ளடக்கிய குழுவினர் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை ஒன்றிய கிராமங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தபட்ட மண்டலங்கள் ஏற்படுத்தி தடுப்புப்பணிகளை அதிகாரிகள் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கிராமங்களில் கண்காணிப்புக்குழு உருவாக்கி வீடு, வீடாக ஆய்வும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் தடுப்பு பணிகளின் நிலை குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட உதவி இயக்குனர் நாகராஜன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., சுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பினர், சுய உதவிக்குழுவினரை உள்ளடக்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி தண்டோரா வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி குறிப்பிட்ட இடைவெளியில், முழு சுகாதார பணி செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களில், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உட்பட வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வருவாய்த்துறை, போலீஸ், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.