செய்திகள்
போலீசார் விசாரணை

103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு- சிபிஐ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Published On 2021-01-20 01:35 GMT   |   Update On 2021-01-20 01:35 GMT
சென்னையில் 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கில் சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:

சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் 72 சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு, ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அவர்தான் தங்கம் காணாமல் போனதை கண்டுபிடித்தார். அவர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தங்கம் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் தங்கம் திருட்டு போன நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். திருட்டு போன தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டதா? அல்லது லாக்கர் உடைக்கப்பட்டதா? என்பது பற்றி தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.ஐ. முன்னாள் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேலு என்பவரிடம், காலையில் இருந்து மாலை வரை விசாரணை நடத்தினார்கள். சி.பி.ஐ. போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரையும், இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Tags:    

Similar News