ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-11-13 04:48 GMT   |   Update On 2021-11-13 04:48 GMT
பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (சனிக்கிழமை) காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (சனிக்கிழமை) காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.

இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 18-ந் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

7-ம் திருநாளான 19-ந்தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருக்கார்த்திகை அன்று மதியம் 2 மணி வரை மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே 2 மணியில் இருந்து 6 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தப்படுவதோடு படிப்பாதையும் அடைக்கப்படும்.

மேலும் திருவிழாவில் மண்டகப்படி அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும். திருக்கார்த்திகை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News