செய்திகள்
கொலை

கமுதி அருகே தலையில் கல்லை போட்டு பெண் கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2020-11-18 09:26 GMT   |   Update On 2020-11-18 09:26 GMT
கமுதி அருகே குடும்ப தகராறில் தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்றவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வங்காபுரம் ஊரை சேர்ந்தவர் தனிக்கொடி (வயது 55). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள்(50). இவரும் கணவருக்கு உதவியாக விவசாய வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி தனிக்கொடிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சலில் அவதிப்பட்ட அவரை மாரியம்மாள் சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். பின்னர் இருவரும் வீட்டிற்குள் தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த தனிக்கொடி, காய்ச்சலால் அவதிப்பட்ட தன்னை மனைவி கவனிக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், வெளியில் கிடந்த கருங்கல்லை தூக்கி கொண்டு வீட்டுக்குள் வந்தார். அங்கு தூங்கி கொண்டு இருந்த மாரியம்மாளின் தலையில் கல்லை போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் இறந்தார்.

மனைவி இறந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நேற்று காலை வழக்கம் போல வீட்டு அருகே வசிக்கும் தனிக்கொடியின் மகன் தமிழரசன் வீட்டுக்கு வந்து உள்ளார். அங்கு தாயார் மாரியம்மாள் தலையில் கல்லால் தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தமிழரசன், அபிராமம் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி திவான், நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய தனிக்கொடியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News