ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி திறந்து வைத்த போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2021-08-16 04:45 GMT   |   Update On 2021-08-16 04:45 GMT
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆவணி மாத பூஜை, நிறை புத்தரிசி பூஜை, ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஆனால் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் நடைபெறும். சிறப்பு பூஜையாக காலை 5.55 மணி முதல் 6.20 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறும்.

அப்போது பாலக்காடு, ஆரியங்காவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு சபரிமலைக்கு கொண்டு வரப்பட்ட நெற்கதிர் கட்டுகள் கோவிலில் பூஜைக்காக வைக்கப்படும். சிறப்பு பூஜைக்கு பிறகு ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நெற்கதிர்களை பிரசாதமாக வழங்குவார்கள்.

இந்த மாதம் 23-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜையையொட்டி ஓணம் பண்டிகையும் 21-ந் தேதி சேர்ந்து வருவதால் 8 நாட்கள் தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள், வழிபாடு நடைபெற உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், தரிசனத்திற்கு 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News