பஸ் வசதி இல்லாததால் வாக்களிக்க செல்ல முடியாமல் தவித்த திருப்பூர் தொழிலாளர்கள் போராட்டம்
திருப்பூர்:
திருப்பூரில் ஏராளமான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இன்று தேர்தல் விடுமுறையையொட்டி ஏராளமான தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சில தொழிலாளர்கள் நேற்றிரவு பணி முடிந்ததும் இன்று காலை சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு போதிய பஸ் வசதி இல்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் புதிய பஸ் நிலையம் முன்பு பெருமாநல்லூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் வசதி செய்யப்படும் என்று கூறியதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.