செய்திகள்
திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்கு முககவசம், சானிடைசர்களை வழங்கவேண்டும் - ஸ்டாலின்
தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு முககவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, முறையே தங்களது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டிம் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
இதற்கிடையே, சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் தணிகாசலம் அவர்களிடம் 1,000 முககவசங்கள் மற்றும் 250 சானிடைசர்களை சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் இன்று வழங்கினார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முககவசம், சானிடைசர், சோப்பு ஆகியவற்றை திரட்டி வழங்கும் சேவையை தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.