செய்திகள்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்திருப்பதை காணலாம்

கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம்- அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

Published On 2020-09-16 08:49 GMT   |   Update On 2020-09-16 08:49 GMT
திருப்பனந்தாள் அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருப்பனந்தாள்:

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருமங்கைச்சேரி, நெய்குப்பை உள்ளிட்ட கிராமங்களில் 1,300 எக்டேர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி நடைபெற்றது. இதில் குறுவை பயிரை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கைச்சேரி பகுதியில் அறுவடையான நெல் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்து வருகிறது. இதை விவசாயிகள் சாலையோரம் காய வைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் இலக்கை விட இந்த ஆண்டு கூடுதலாக நெல் அறுவடையாகி இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனுக்குடன் நெல் கொள்முதல் நடைபெறாத காரணத்தால் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருமங்கைச்சேரி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

அறுவடையான நெல்லை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் திருமங்கைச்சேரி நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தரமான தார்ப்பாய்களை கொண்டு மூடி வைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Tags:    

Similar News