செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சி.சாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் கீழ்பென்னாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் சாலையூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் பாபு (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.