கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக மருத்துவ மாணவர்கள் போராட்டம்
கோவை:
கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பான முதுநிலை படிக்கும் மாணவர்கள் 150 பேர் உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே இவர்கள் மருத்துவகல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தினமும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முதுகலை மருத்துவ மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு ஈடுபடுத்தப்படும் மருத்துவ மாணவர்களுக்கு போதிய உணவு வசதி, பணி முடிந்ததும் தனிமைப்படுத்துவதற்கு அறை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு 2-வது நாளாக இன்று காலை முதுகலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.