செய்திகள்
கொள்ளை

விழுப்புரம் அருகே பஞ்.தலைவர் பெண் வேட்பாளரிடம் நகை பறிப்பு

Published On 2021-10-01 06:31 GMT   |   Update On 2021-10-01 06:31 GMT
விழுப்புரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் மர்ம மனிதர்கள் நகையை திருடிசென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகே கஞ்சனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்நந்திவாடி பகுதியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி முல்லைக்கொடி (வயது 30) என்பவர் போட்டியிடுகிறார்.

அவர் பிரசாரத்தை முடித்து விட்டு நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் இன்று அதிகாலை முல்லைக்கொடியின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே நுழைந்த மர்மமனிதர்கள் முல்லைக்கொடியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

அப்போது திடுக்கிட்டு எழுந்த முல்லைக்கொடி திருடன்... திருடன்... என அலறினார். இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் மர்மமனிதர்கள் திருடிய நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கஞ்சனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மமனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து பெண்ணிடம் மர்ம மனிதர்கள் நகையை திருடிசென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News