இந்தியா
இந்தியா-ரஷியா இடையே ரூ 5200 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2021-12-06 09:19 GMT   |   Update On 2021-12-06 10:18 GMT
பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர் கேய் லால்ரோவ் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷொய்கு நேற்று இரவே டெல்லி வந்தனர்.

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சு வார்த்தையின்போது இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ரஷிய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. 6 லட்சத்து ஆயிரத்து 427 ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.

2031 வரை 10 ஆண்டுகளுக்கு ரஷியாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.



ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிற்பகலில் டெல்லி வருகிறார். அவர் ஐதராபாத் இல்லத்தில் தங்குகிறார். அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

2019-ம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார்.

மோடியுடன் சந்திப்புக்கு பிறகு இரவு 9.30 மணிக்கு புதின் டெல்லியில் இருந்து ரஷிய புறப்பட்டு செல்கிறார்.


Tags:    

Similar News