செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு

Published On 2021-02-20 04:55 GMT   |   Update On 2021-02-20 08:13 GMT
பரமக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது கட்சியான காங்கிரஸ் பற்றி நகைச்சுவையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமக்குடி:

பரமக்குடியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது கட்சியான காங்கிரஸ் பற்றி நகைச்சுவையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரசில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்து விட்டார்கள். இதை நம்பி 2016-ம் ஆண்டு நான் தேர்தலில் நின்றுவிட்டேன் ஆனால் உறுப்பினர்களே நமக்கு ஓட்டு போடவில்லை.

சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்தது. இதில் எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும்.

இதற்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். நம் நிர்வாகிகள் அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் இளைஞர் காங்கிரஸ் என ஒரு பொய்யான அறிக்கை வந்தது. அதில் 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம் என்று சொன்னோம்.

சென்னை பாராளுமன்றத்தில் மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் வாங்கின வாக்குகள் மட்டும் 30 ஆயிரம் தான் வந்தது. ஆகையால் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

“மாநில அரசானது உண்மையான அ.தி.மு.க. கிடையாது. முழுக்க முழுக்க பா.ஜ.க.விற்கு உடந்தையாக இருக்கக் கூடிய அரசாக தான் இருக்கிறது.

ஆகையால் மத்திய அரசும் இந்தத் தேர்தலில் ஒரு மைய பிரச்சனையாக தான் இருக்கும். இருந்தாலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற தான் செய்யும்.

கடந்த 2009-ம் ஆண்டில் வெற்றி பெற்றதைப் போல் 2021 தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News